திருநெல்வேலி-தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது..
பிரதான பாசன அணையான பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் நேற்று 85.40 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 86.45 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 879 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று இந்த அணைப்பகுதியில் 50 மீ.மீ மழை பெய்தது. இதனால் அணைக்கு தொடர்ந்து அதிக அளவில் நீர் வர தொடங்கி உள்ளது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 99.28 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 65.80 அடியாக அதிகரித்து உள்ளது.
இதேபோல 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் நேற்று 73.50 அடியாக இருந்தது. இது இன்று 74 அடியாக உயர்ந்து உள்ளது. 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 72.50 அடியாக இருந்தது. இது இன்று 73 அடியாக உயர்ந்து உள்ளது. 72.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் தொடர் மழையினால் நேற்று நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதேபோல குண்டாறு அணையும் நிரம்பி உள்ளது. இந்த அணைக்கு வரும் தண்ணீரும் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
கருப்பாநதி, குண்டாறு அணைகள் நிரம்பியது அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 132.22 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 104.25 அடியாக உயர்ந்து உள்ளது. 50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 26 அடியாகவும், 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 29.50 அடியாகவும், 23.60 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணை நீர்மட்டம் 13.19 அடியாகவும் அதிகரித்து உள்ளன.
0 comments