ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » கூடங்குளம் சாகும் வரைப் போராட்டம் முடிவுக்கு வந்தது - 144 தடை உத்தரவு நீக்கம்


 கூடங்குளம் விவகாரத்தில் போராட்டக் குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து ராதாபுரம் தாலுகாவில் கடந்த 9 நாட்களாக அமலில் இருந்த 144 தடை உத்தரவு இன்று நீக்கப்பட்டது. இதையடுத்து, கூடங்குளம் பகுதி கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.500 கோடி வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 31 ஆம் தேதி கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அணுமின் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதைக் கண்டித்து அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் 15 பேர் இடிந்தகரையில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானதால் ஏராளமான போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். கூடங்குளம் அமைந்துள்ள ராதாபுரம் தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் போராட்ட குழுவினருடன் கலெக்டர் செல்வராஜ் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. போராட்டக் குழு சார்பில் அரிமாவளவன் தலைமையில் 10 பேர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக போராட்ட குழு கூறியதை அடுத்து உதயகுமார் தலைமையிலான 15 பேரும் சாகும் வரை உண்ணாவிரதத்தை நேற்று இரவு முடித்தனர். மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார். இதைத் தொடர்ந்து ராதாபுரம் தாலுகாவில் கடந்த 9 நாட்களாக அமலில் இருந்த 144 தடை உத்தரவு இன்று மாவட்ட நிர்வாகத்தால் விலக்கப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 2 கி.மீ. தூர பகுதிக்குள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 9 ஆம் தேதி மாலை 6 மணி வரை இந்த 2 கி.மீ. பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார். 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதை தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடங்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்காக ரூ. 500 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.  உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் ரூ. 500 கோடி மதிப்பிலான பணிகளை செயல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கூடங்குளம் பகுதி பஞ். தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தூண்டில் வளைவு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுதல், சாலை, தெருவிளக்கு வசதிகள் செய்தல¢ ஆகியவை குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. இதற்கிடையே, இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்தில் கடற்கரை கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இன்றும் உண்ணாவிரதம் இருந்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்கும் வரை உண்ணா விரதம் தொடரும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

0 comments

Leave a Reply