தீபாவளி பண்டிகையையொட்டி அரிசி, சர்க்கரை, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்க மறுத்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் ரவிகுமார் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் சிறிய குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் நிரம்பி வருகிறது.
மழை காரணமாக 6 வீடுகள் முழுமையாகவும், 7 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. இரண்டு கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பழைய காயலில் மின்னல் தாக்கி ஒருவர் இறந்துள்ளார். கடம்பூர், விளாத்திகுளம், குளத்தூர், எப்போதும் வென்றான் பகுதியில் விவசாயப் பணிகள் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளவால்தொத்தி என்ற கிராமத்தில் மட்டும் ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கிராமங்கள் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு கசாயம் வழங்க 2ஆயிரம் கிலா நிலவேம்பு பவுடர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகளில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும். சீனப் பட்டாசுகளைத் தடுக்க கோட்டாட்சியர்கள் தலைமையில் வட்டாட்சியர்கள் முன்னிலையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை சீனப்பட்டாசுகள் எதுவும் சிக்கவில்லை. தூத்துக்குடி துறைமுகம் வழியாக கப்பலில் சீனப் பட்டாசுகள் வருவதை தடுக்கும் வகையில், சோதனை நடத்த சுங்க இலாகா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 950 கூட்டுறவு ரேசன் கடைகள் உள்ளது. இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் 598 கடைகள் செயல்பட்டு வருகிறது. ரேசன் கடை ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் 45 கடைகள் மூடப்பட்டுள்ளன. மாற்று நபர்கள் மூலம் கடைகள் திறந்து பொருட்கள் வழங்கப்படும். தீபாவளி பண்டிகைக் காலத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் நூறு சதவீதம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை தரமறுத்தால் புகார் பொதுமக்கள் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
0 comments