திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 12-ம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 12-ம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகின்றது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கின்றது.
அதிகாலை 5.15 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகின்றார். அங்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகின்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கின்றது. 1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் மாலை 4 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கின்றது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றார்.
சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளல்
2-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகின்றது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.
1-ம் திருநாள் முதல் 6-ம் திருநாள் வரையிலும் மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள், மேள வாத்தியங்களுடன் சண்முக விலாசம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெறுகின்றது.
17-ம்தேதி, சூரசம்ஹாரம்
6-ம் திருநாளான வருகிற 17-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணியளவில் யாகசாலையில் தீபாராதனை நடக்கின்றது.
பின்னர் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கின்றது.
மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்ஹாரமான பின்பு சந்தோச மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் கிரி பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.
18-ம் தேதி, திருக்கல்யாணம்
7-ம் திருநாளான 18-ம்தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கின்றது.
மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
0 comments