சாத்தான்குளம் சார்நிலை கருவூலத்தில் ஆதார் எண் இல்லாதவர்களிடம் சம்பளம் பட்டியல் வாங்க மறுத்து வருவதால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சாத்தான்குளம் தாலுகாவில் பகுதியில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சார்நிலை கருவூலம் மூலம் முன்னதாக சம்பளம் பட்டியல் வாங்கப்பட்டு மாத இறுதியில் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் ஆதார் எண் கட்டாயம் என அறிவித்ததையட்டி வாக்காளர் பட்டியல் , குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்குகளுக்கு ஆதார் எண் இணைக்க கேட்கப்பட்டு வருகிறது.
இதன்படி சார்நிலை கருவூலம் மூலம் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் அவர்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை , பான் கார்டு ஆகியவைகளை சம்பள பட்டியலுடன் இணைத்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவை உள்ளவர்கள் உடனடியாக கொடுத்து விட்டனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஆதார் கட்டாயமில்லை என உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சாத்தான்குளம் சார்நிலை கருவூலத்தில் இந்த மாதத்திலேயே ஆதார் எண்ணை இணைத்து தந்தால் மட்டுமே சம்பள பட்டியல் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு அவர்களது கணக்கில் வரவு வைக்க முடியும் என கூறி சம்பள பட்டியலை கருவூல அதிகாரிகள் வாங்க மறுத்து வருவதாக அரசு ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சம்பள பட்டியல் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் இந்த மாதம் சம்பளம் கிடைக்குமா? எனவும் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண்மைத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ஆதார் கட்டாயம் இல்லையென கோர்ட் அறிவித்துள்ளது. ஆனால் இங்குள்ள கருவூல அதிகாரி ஆதார் எண், குடும்ப அட்டை எண் கொடுத்தால் மட்டுமே சம்பளம் வழங்க இயலும் என தெரிவித்து வருகிறார். இது மிகுந்த கண்டனத்துக்குரியது. ஆதலால் ஆதார் எண் கேட்டு கட்டாயபடுத்தாமல் சம்பளம் பட்டியல் பெற்று சம்பளம் வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.
0 comments