ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தலைக்கவசம் அணிந்து வந்த மர்மநபர், மூதாட்டியிடம் நகை பறித்தார். இதில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.
ஆறுமுகனேரி, ஜெயின்நகர் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுதர்சனம் (78). இவர், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் தட்டச்சராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீனாட்சி (72). ஞாயிற்றுக்கிழமை இரவு, சுதர்சனம் ஆறுமுகனேரி பஜாரில் சாமான்கள் வாங்கச் சென்றிருந்தாராம். அப்போது தலைக்கவசம் அணிந்து வந்த மர்மநபர் ஒருவர், மீனாட்சியிடம் தண்ணீர் கேட்டாராம். தண்ணீர் எடுக்கச் சென்ற மூதாட்டியின் பின்னாள் சென்ற ஆசாமி, அவரது கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தள்ளி விட்டுவிட்டு தப்பி விட்டாராம்.
இதில், பலத்த காயமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் (பொ) கோவிந்தராஜ், ஆறுமுகனேரி ஆய்வாளர் முத்து சுப்பிரமணியம் உள்ளிட்டோர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments