தூத்துக்குடியில் ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை, வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஜூலை 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சங்குக் கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை பயிலரங்கம் நடைபெறும். 15 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி ஆட்சி மொழிக் கருத்தரங்கம் நடைபெறும். பயிலரங்கில் ஆட்சிமொழி வரலாறுச் சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள், மொழிபெயர்ப்பு கலைச் சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப் பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும் ஆகிய ஆறு தலைப்புகளில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளார்கள். அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் சிவசாமி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Daily News
,
News
0 comments