சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்பது பழந்தமிழர் வாழ்வியலின் ஓர் அங்கமாக இருந்தது என்று தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் ராசாராம் கூறினார்.
உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில், "பழந்தமிழர் சுற்றுச்சூழல் சிந்தனைகள்' என்பது குறித்த கருத்தரங்கம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கைத் தொடக்கி வைத்து பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி பேசியதாவது:
உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் உலகத் தமிழ்ச் சங்கம் புதுப்பொலிவுடன் செயல்பட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு ரூ.25 கோடியில் பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டு வருகிறது என்றார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ: குடும்ப அமைப்பு, சமூக அமைப்புக்கு பண்டைய தமிழர்கள் முக்கியத்துவம் அளித்தனர். கலாசாரத்தைப் போற்றிப் பாதுகாத்தனர். எந்தவொரு உயிரினத்தின் வாழ்வியலையும் மாற்றவில்லை. இயற்கையைப் போற்றி வணங்கினர். இப்போது இவையெல்லாம் மாறுதலுக்கு உள்ளாகி உள்ளன. கலாசாரத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
தமிழ் வளர்ச்சி, செய்தித் துறைச் செயலர் மூ. ராசாராம்: பழங்காலத் தமிழர்களின் வாழ்வியலும், இயற்கையும் ஒன்றையொன்று சார்ந்து இருந்ததை சங்க இலக்கியங்களில் காண முடியும். ஐவகை நிலங்கள் இயற்கையைச் சார்ந்தே வகுக்கப்பட்டன. ஒவ்வொரு நிலத்துக்கும் ஏற்ற பறவை, விலங்கு, பூ, மரம், செடி, கொடி என வகைப்படுத்தப்பட்டன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்பது பழங்காலத் தமிழர்களின் வாழ்வியலாகவே இருந்தது என்றார்.
கருத்தரங்கில், மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.வி. கருப்பையா, ஆர். சுந்தர்ராஜன், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், உலகத் தமிழ்ச் சங்க தனி அலுவலர் க. பசும்பொன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 comments