தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 113-ஆவது பிறந்த நாள் விழாவும் பொதுக்கூட்டமும் திருச்சி பொன்மலை ஜி-கார்னர் திடலில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்றுப் பேசுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை மாலை 4.45 மணிக்கு வருகிறார்.
மாலை 5 மணிக்குத் தொடங்கும் பொதுக் கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தலைமை வகிக்கிறார். ராகுல் காந்தி சிறப்புரையாற்றுகிறார்.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோரும் பேசுவார்கள் எனத் தெரிகிறது. இதற்காக 40 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பின்னால் இருப்போரும் ராகுலின் பேச்சைக் கவனிக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு விமான நிலையம் அருகே உள்ள பண்ணை ஒன்றில் மாநிலம் முழுவதிலும் இருந்து வரும் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் தில்லிக்கு புறப்படுகிறார்.
விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை அவரது சிறப்புக் காவல் படையின் உதவி காவல் துறைத் தலைவர்(எஸ்பிஜி- ஏஐஜி) பி.எஸ். ராவத் தலைமையிலான குழுவினருடன், திருச்சி மத்திய மண்டல காவல் துறையினர் செய்துள்ளனர். சுமார் 2,600 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
0 comments