ஆறுமுகனேரி வார சந்தையில் ஆடுகள் வாங்க வந்திருந்த அம்மன்புரம் கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம் தீவிரமாக நடந்து வருகிறதாக மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் எஸ்.எம்.ஏ.கியூ.ஜெய்லானி தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் அம்மன்புரம் ஊராட்சியில் ஆடுகள் பெற தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆறுமுகனேரி வார சந்தையில் தலா 3 ஆட்டுக்குட்டிகளும் ஒரு கிடாக் குட்டியும் பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் கொள் முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் எஸ்.எஸ்.ஜோதி ராஜலிங்கம் மற்றும் அம்மன்புரம் கால்நடை மருத்துவமனை இளைநிலை கால்நடை மருத்துவர் டாக்டர் பி.செந்தில்கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இப்பணியை பார்வையிட இணை இயக்குனர் ஜெய்லானி வருகை தந்தார்.
அரசு திட்டத்தில் ஆடுகள் பெற்றபின் களைப்பில் மர நிழலில் அமர்ந்துள்ள பெண்.(அரசு முத்திரை ஆடுகளின் காதுகளில்).
பயனாளிகளை ஆறு மாத ஆடுகளைத்தான் வாங்க வேண்டுமென வலியுறுத்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்த்துக்குடி மாவட்டத்தில் ஆடு மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள் வரும் 2ஆம் தேதிக்குள் முடிவு பெறும். மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சங்கம்பட்டி ஊராட்சி பகுதியில் 47 குடும்பத்தினர்களுக்கு 47 கறவை மாடுகளும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியம் இனாம் சுப்பிரமணியபுரம் ஊராட்சி பகுதியில் 26 குடும்பங்களுக்கு 26 கறவை மாடுகளும் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
கறவை மாடுகள் பயனாளிகளை அழைத்து சென்று ஆந்திராவில் வாங்கப்பட்டு வருகிறது.
இதே போன்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இடைசேவல் ஊராட்சியில் 30 குடும்பங்களுக்கும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் அம்மன்புரம் ஊராட்சியில் 30 குடும்பங்களுக்கும் தலா 3 ஆடுகள் மற்றும் ஒரு கிடா ஆக நான்கு ஆடுகள் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டு அவைகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
கறவை மாடுகள் ரூபாய் 30 ஆயிரம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாடு மற்றும் கறவை மாடுகள் உடனடியாக விற்பனை செய்யாத அளவில் கண்காணிக்கப்படுவதோடு அவர்களுக்கு ஹெல்த் கார்டு வழங்கி கால்நடை பராமரிப்பு துறையினரால் கண்காணிக்கப்படும்.
வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தினருக்கு ஆடுகள் வழங்குவதை பார்வையிடும் தூத்துக்குடி மாவட்ட மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் எஸ்.எம்.ஏ.கியூ.ஜெய்லானி.(இடமிருந்து 2வது)
மேலும் தொடர்ந்து நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவரின் பிரதிநிதிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இத்திட்டத்தில் தவறு நடைபெறாத வண்ணம் இருக்க அரசின் தீவிர கண்காணிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ஜெய்லானி.
0 comments