திருச்சியில் தப்பிய அனிதா ஆதரவாளர்: ஆல்நாத்
திருச்சி மருத்துவமனையிலிருந்து தப்பிய அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் பற்றி ஆறுமுகனேரியில் புதன்கிழமை காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆறுமுகனேரி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஆல்நாத்(33). இவர் திமுக கட்சியில் இருந்து வருகிறார்.திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்.இவர் மீது ஆறுமுகனேரி நகர திமுக செயலாளர் கா.மு.சுரேஷ் மீது கொலை முயற்சிக்கு தூண்டிய வழக்கு, சுரேஷின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கு, சுரேஷின் தம்பி டாஸ்மார்க் பார் மீது தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதே வழக்குகளில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏயும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.
நெஞ்சு வலிகாரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஆல்நாத் அங்கிருந்து புதன்கிழமை காலை தப்பி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஆல்நாத் தப்பியது தொடர்பாக ஆறுமுகனேரியில் ஆல்நாத் உறவினர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 comments