முன்னாள் அமைச்சரும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன், வரும் 17ம் தேதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, சென்னையில் நடைபெறவுள்ள, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், - எம்.பி.,க்கள் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தால், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படலாம் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த, 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை, அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பணியாற்றிவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர், கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக பணியாற்றினார். அப்போது, தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து கொண்டு, அ.தி.மு.க.,விலிருந்து விலகினார்.
மீண்டும் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வானார். கடந்த சட்டசபை தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சிப் பணிகளில் ஈடுப்பாடு காட்டாமல் ஒதுங்கி காணப்படுகிறார். சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அவர் பணியாற்றவில்லை.
எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்:சமீபத்தில், சென்னைக்கு வந்த, ஐ.மு., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப்முகர்ஜி, தி.மு.க., - காங்கிரஸ், - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - எம்.பி.,க்கள், - எம்.எல்.ஏ.,க்களிடம் ஆதரவு திரட்டினார். சென்னையில், பிரணாப் முகர்ஜிக்கு அளித்த விருந்து நிகழ்ச்சியில், அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், வரும் 17ம் தேதி, நடக்கும் தி.மு.க., - எம்.பி.,க்கள், - எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பாரா? அல்லது வழக்கம்போல் புறக்கணிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ., ஒருவரின் ஓட்டு கிடைப்பது என்பது மிக முக்கியமானது என்பதால், அக்கூட்டத்தை அவர் புறக்கணித்தால், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்படலாம் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.- நமது சிறப்பு நிருபர் -
0 comments