ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Flok - Ballard » கதைப்பாடல்கள்

கதைப்பாடல்களும்ஆறுமுகநேரியும்
ஆறுமுகநேரியில் உள்ள சிறுவழிபாடு மரபிலான கோயில்களில் உறைந்துள்ளத் தெய்வங்கள் தலையில் மணிமகுடமணிந்து அரசாட்சி செய்த அரசர்களாவார்கள் என்பதைப் பின்வரும் கதைப்பாடல்கள் எடுத்தியம்புகின்றன. இக்கதைப் பாடல்கள் கி.பி.16 ஆம் நுற்றாண்டில் உருவானவைகளாகும்.
குலசேகரராஜாகதை (ஐவர்ராஜாக்கள்கதை)
வள்ளியூரில் கோட்டைக்கட்டி அரசாண்ட குலசேகரப்பாண்டியன் என்ற பொன்னும் பெருமாள் மன்னனின் கதை இது. இம்மன்னனின் சகோதர்கள் முத்தும் பெருமாள், முகிலம் பெருமாள், முடிசூடும் பெருமாள், பாண்டியப்பெருமாள் என்ற நால்வராவர். கன்னடிய (வடுகன்) அரசனுடைய மகள் (வடுகச்சி) குலசேகரனின் மீது மையல் கொணடாள். மனஉறவுக்கு தூதனுப்பினான் கன்னடியன். குலசேகரன் அதை ஏற்காததால் களக்காடு மலைப்பகுதியில் போர் நடைபெற்றது. உடனிருந்தவர்களின் சதியால் தோல்வியடைந்தான். வைரத்தைத் தின்று மரணமெய்துகிறான் குலசேகரன். வடுகச்சியும் உடன்கட்டை ஏறி மாய்த்துக் கொள்கிறாள். குலசேகரனின் உடன்பிறந்தோர் நாஞ்சில் நாடு நாடு சென்று தப்பிக்கின்றனர். இக்குலசேகர பாண்டியராசா வழிபாடு ஆறுமுகநேரியில் அமைந்துள்ள சில கோயில்களில் காணப்பெறுகின்றது.
வெங்கலராசான்கதை
சோழ நாட்டில் புட்டாபுரத்தில் சப்த கன்னியரின் புதல்வர்கன் எழுவரை பத்திரகாளி அம்மன் வளர்த்து வந்தாள். தன்னிகரில்லாத வீரர்களான அவர்கள் வலங்கையர் எனப் பெயர் பெற்றனர். வலங்கையர்கள் சோழர்களின் படைத்தலைவர்களாயினர். சம்பரன் கலியாணன் மற்றும் சோழ வணிகர்களுக்குத் துன்பம் கொடுத்த இடங்கையர்களை அழித்தனர். காவிரி பெருக்கெடுத்த போது அணை கட்ட மறுத்ததால் எழுவரின் இருவர் தலைகள் வெட்டப்பட்டன. எஞ்சிய ஐவர் சோழநாடு கதிர்கொண்ட நாடு கண்டி நாடு இலங்கைக்குக் குடிப்பெயர்ந்து அங்கு குறுநில மன்னர்களாக வாழ்ந்து வருகின்றனர். ஈழ நாட்டில் வித்தியாதர முனிவரிடமிருந்து இரும்பைப் பொன்னாக்கும் கலைக்காக எதிரிகளால் வலங்கையன் மரணமடைகிறான். வலங்கையன் பேரன் வெங்கலராசன் தன்னுடைய புதல்விகள் இருவருடன் திருதாங்கூருக்கு ஏராளமான தங்கக் கட்டிகளுடன் கப்பலில் தப்பி வந்து இறங்கி வெண்கலக் கோட்டை கட்டி வாழ்ந்து வருகிறான். அங்கு வஞ்சி மார்த்தாணடவர்மன் அப்பெண்கள் மீது மையல் கொண்டு பெண் கேட்டு வருகிறான். மறுத்த வெங்கலராசன் தண் மகளொருத்தியின் தலையை வெட்டிப் போட்டுவிட்டு திருச்செந்தூர் அருகே உள்ள தேரிப் பகுதிக்குக் குடிபெயருகிறான். தேரிப்பகுதியில் வெண்கலக் கோட்டைக் கட்டி வாழ்ந்து வருகிறான். அவ்வூர் அரசன் நளன் என்பான் இரண்டாவது மகள் மீது விருப்பங்கொண்டு அவள் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி அவளைக் கைது செய்து சென்றான். வெங்கலராசன் தம் பாிவாரங்களுடன் நளராசனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தான். வெங்கலராசன் மகள் நளன் நாடு அழியச்சாபமிட்டு மாண்டாள். இவ்வெங்கலராசனுக்கும் அவனுடைய புதல்விகள் இருவருக்கும் வழிபாடுகள் ஆறுமுகநேரியில் காணப்படுகின்றன.
உலகுடையபெருமாள்மற்றும்சரியகுலபெருமாள்கதை
மதுரையை ஆட்சி செய்த மாமன்னன் ஜடாவர்மன் குலகேரபாண்டியனின் (கி.பி.1480-1597) உடன் பிறந்த தங்கையின்புதல்வர்களான உலகுடைய பெருமாள் மற்றும் அவருடைய தம்பி சரியகுலப் பெருமாள் கதையாகும். மதுரையை குலசேகரப் பாண்டியனும் முகிலும் பெருமாள் வரோதையப் பெருமாள் மதுரைவீரப் பெருமாள் ஆட்சி செய்து வந்த போது வாணாதிராயர்களின் சூழ்ச்சியால் குலசேகரனின் ஆட்சி வீழ்த்தப்படுகிறது. போரில் மாண்டனர். ஆட்சியும் காட்சியும் மாறியது. மாமனைத் தோற்கடித்த எதிரிகளை வீழ்த்தி 12 ஆண்டுகள் மதுரையை ஆட்சி புரிகின்றனர். பின்பு ஏற்பட்டப் போரில் உலகுடைய பெருமாளும் சரியகுலப் பெருமாளும் தோல்வியடைந்து தம்மைத் தாமே மாய்த்துக் கொள்கின்றனர். கேரளா ஆரியங்காவில் தவமிருந்து வரம் பெற்று சரியகுலப்பெருமாள் குரும்பூர் பட்டணத்திலமர்ந்து ஆட்சி செய்கிறார். ஆறுமுகநேரியில் இவருக்கு வழிபாடுகள் உள்ளன.
கிழக்கத்திமுத்துகதை
கொற்கைப் பாண்டியனின் மகன் இளவரசன் கிழகத்திமுத்து ஆவார். ஆட்சியை கைப்பற்றும் ஆசையில் எதிரிகள் சதி செய்து கொன்று விடுகின்றனர். கிழக்கத்தி முத்து சிவனிடம் வரங்கள் பல பெற்று கொடியவர்களை அழித்த செய்தியும் வழிபடும் மக்களைக் காக்கும் செய்தியும் இக் கதைப்பாடலில் உள்ளது. கொற்கை இளவரசனுக்கு ஆறுமுகநேரியில் வழிபாடுகள் காணப்பெறுகின்றன.
உடையார்கதை
தென்காசி ராஜா ஸ்ரீவல்லப மாற பாண்டியனின் (சீவிலி) அட்சிக் காலத்தில் உடையார் என்ற வீரத்தளபதிக்கு ஏற்பட்ட அவல மரணம் பற்றியக் கதையாகும். திருக்களூரில் பிறந்த உடையார் தென்காசி ஸ்ரீவல்லப மாறனிடம் பணிபுரிகின்ற வேளையில் உடன் பணியாற்றித் தளபதிகளின் சூழ்ச்சியால் மோதிரக் கள்வன் ஆக்கப்பட்டார். அடையார் பழி கருதி தென்காசி கழுகன் திரட்டில் கழுகேறி தம்முயிரை மாய்த்துக் கொள்கிறார். தென்காசி ராஜா ஸ்ரீவல்லப மாறனுக்கும் உடையாருக்கும் ஆறுமுகநேரியில் வழபாடுகள் காணப்படுகின்றன.
சிவனணைஞ்சபெருமாள்கதை
தென்காசி ராஜன் ஸ்ரீவல்லப மாறபாண்டியனின் (உடையார் கதைக்கு காரணமானவன்) தங்கை பொன்னுருவியைச் சோழர் குலத்தைச் சேர்ந்த செண்பகராசனுக்கு மணமுடித்து செங்கோட்டையைச் சீதனமாக வழங்குகிறான். செண்பகராசனின் மகன் சிவனணைஞ்ச பெருமாள் வாலிபப் பருவத்தில் வண்ணார் குலப்பெண் சின்னனைஞ்சி மீது மையல் கொண்டு வசிய மருந்திட்டு உறவாடி மணமுடிக்கிறார். பெண்வீட்டார் ஸ்ரீவல்லபமாறனிடம் முறையிடுகின்றனர். மருமகனுக்கு அறிவுரைகள் கூறினார் ஸ்ரீவல்லபமாறன். தாய்மாமன் பேச்சை மதியாத சிவனணைஞ்ச பெருமாளுக்கும் ஸ்ரீவல்லபமாறனுக்கும் போர் ஏற்பட்டது. சிவனணைஞ்சபெருமாள் மாமனால் கொல்லப்படுகின்றான். சிவனணைஞ்சி தற்கொலை செய்து கொள்கிறாள். ஆறுமுகநேரியில் சிவனணைஞ்ச பெருமாள் வழிபாடும் காணப்படுகின்றது.

0 comments

Leave a Reply